பதிவு செய்த நாள்
11
ஜூலை
2014
10:07
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மனுக்கு, பக்தர்கள் புடைசூழ, வேதவிற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள் வேதங்களை ஜெபிக்க, 91 அடி உயர ராஜகோபுரத்தில் வேள்விச்சாலையில் வைக்கப்பட்ட புனித தீர்த்தங்களை ஊற்றி திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட்டது. கோவையில் வாழும் பக்தர்களின் வேண்டுகோளின் படி,2007 ம் ஆண்டு செப்டம்பரில் கோனியம்மன் கோவில் ராஜகோபுரம் அமைக்கும் பணி துவ ங்கியது. ஏழு ஆண்டுகளில் 2014 ல் இந்த ஆண்டு நிறைவு செய்யப்பட்டது. கோவையின் காவல் தெய்வத்துக்கு 91 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ராஜகோபுரம் ஏழு நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜகோபுரத்தின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் வகையில் கோபுரத்தின் மேற்பகுதியில் 9 கோபுரக்கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜூலை 3 ம் தேதி மாலை 5.00 மணிக்கு மங்கல இசையுடன் கோனியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா துவங்கியது. இரவு 7.00 மணிக்கு புதிய ராஜகோபுர அமைப்புத்தலத்தில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன, ஜூலை 4 ல் புதிய ராஜகோபுரத்துக்காக உரு வாக்கப்பட்ட ராஜகோபுரகலசங்களை புனிதமாக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜூலை 9 ம் தேதி, காலை மங்கல இசையுடன், ராஜகோபுரக்கலசங்களை ஸ்தாபிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. காலை10.30 மணிக்கு ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் 9 கலசங்களை சிவாச்சாரியார்கள் ஸ்தாபித்தனர்.
நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்வியும், இரவு நிறைவு வேள்வியும் நடந்தது. இன்று காலை 4.00 மணிக்கு பெருவேள்வி நிறைவடைந் தது. காலை 5.00 மணிக்கு, வேள்விச்சாலையிலிருந்து திருக்குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்த வண்ணம் ராஜகோபுரத்தின் மீது எழுந்தருளினர், 6.20 மணிக்கு புதிய ராஜகோபுரக்கலசங்கள் மற்றும் கருவறை விமானங்கள் மீது வேள்வியில் வைக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது. வேள்வி மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் ராஜப்பாகுருக்கள், கண்ணப்பன் ஒதுவார் குழுவினர் அகண்டதிருமுறை பாராயணம் செய்தனர். திருக்குட நன்னீராட்டு விழாவில் பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பிள்ளையார்பீடம் பொன் மணிவாசக அடிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் கண்ணன், இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் தனபால், கலெக்டர் அர்ச்சனாபட்னாயக், மாநகராட்சி கமிஷனர் லதா, போலீஸ்கமிஷனர் விஸ்வநாதன், தமிழக அமைச்சர் வேலுமணி, சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர். கிணத்துக்கடவை சேர்ந்த நாகராஜன் கோனியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி குறித்து வர்ணனை செய்தார். காலை 6.00 மணிக்கு துவங்கிய வர்ணனை தொடர்ந்த 8.00 மணி வரை நீடித்தது.