பதிவு செய்த நாள்
14
ஜூலை
2014
11:07
தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷான கடற்கரை அசுத்தமாக காணப்படுவதால், அதில் புனித நீராடும் பக்தர்கள் முகம் சுழிக்கும் அவலம் உள்ளது. இங்கு நவகிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளதாலும், ராமபிரானால் பூஜிக்கப்பட்ட தளம் என்பதாலும் மிகவும் பிரசித்து பெற்று விளங்குகிறது. அத்துடன், திருமண தடை, சர்ப்ப தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷ பரிகாரங்களுக்கு இங்கு உடனடி தீர்வு கிடைப்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். தவிர, முன்னோர்களுக்கு தர்பணம், நவகிரக தோஷங்கள், முன்ஜென்ப பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, ஆயுள், கல்வி, செல்வம் பெருகவும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. மேலும், ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் இங்கு வந்து நீராடிய பின்னரே, வேறு தலங்களுக்கு சென்று வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நவபாஷான கடற்கரை ஓரத்தில் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பறை கழிவுகள் நவக்கிரகம் அமைந்துள்ள நவபாஷான கடலில் கலப்பதுடன், பக்தர்கள் கழற்றி விட்டுசெல்லும் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை உடனுக்குடன் அகற்றப்படாததால் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.
விழுப்புரம், ராமேஸ்வரம்சுந்தர்: நவபாஷான கடலுக்குள் பக்தர்கள் விட்டுசெல்லும் துணிகள், பிரசாத பொருட்கள், பூஜை பொருட்கள் ஆகியவைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தவிர, கடற்கரையில் உள்ள கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுகளும் நேரடியாக கடலில் கலக்கின்றன. இதனால், கடல் மேலும் மாசுபடிந்து வருவதால் பக்தர்களை முகம் சுழிக்க வைத்து வருகிறது. பக்தர்களின் நலன் கருதி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரையூர், சீனிவாசன்: வாகன கட்டணம், நடைபாதை கட்டணம் என, பக்தர்களிடம் அடுத்தடுத்து வசூலிக்கப்படுகிறது. ஆனால், நவகிரகத்தை சுற்றி உடைந்து துருப்பிடித்துள்ள இரும்பு கம்பிகளை கூட இன்று வரை மாற்ற நடவடிக்கை இல்லை. இதனால், பக்தர்கள் அச்சத்துடன் நவக்கிரத்தை சுற்றிவர வேண்டியுள்ளது. பக்தர்களுக்கு போதிய வசதி ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவிபட்டினம் ஊராட்சி தலைவர், ஜாகிர்உசேன்: பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் நவபாஷான கடற்கரை மேம்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரையில் தேங்கியுள்ள பொதுக் கழிப்பறை கழிவுகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அகற்றப்படுகின்றன. மேலும், நவபாஷான பகுதியில் உடைந்த கம்பிகளை மாற்ற ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. விரைவில் சீரமைக்கப்படவுள்ளது, என்றார்.