பதிவு செய்த நாள்
18
ஜூலை
2014
10:07
சேலம்: சேலத்தில் நேற்று நடந்த தேங்காய் சுடும் பண்டிகையில், புதுமணத் தம்பதியர், சிறுவர், சிறுமியர், பெண்கள் தேங்காய் சுட்டு வழிபாடு நடத்தினர். சேலத்தில், ஆடி, 1ம் தேதி தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பிரபல புரணாங்களை, இதிகாச கதைகளை மேற் கொள்ள காட்டி கொண்டாடப்படும் இந்த பண்டிகை நாளில், புதுமணத் தம்பதி, சிறுவர், சிறுமிகள் தேங்காயை சுட்டு சாமிக் கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், நேற்று மாலையில், சேலம் மாநகர், புறநகர் பகுதிகளில் நடந்த தேங்காய் சுடும் பண்டிகையில், புதுமண தம்பதி உட்பட திரளானோர் தேங்காய் சுட்டு குலதெய்வங்களுக்கும், தங்கள் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் வைத்து வழிபாடு மேற் கொண்டனர். சேலம் மாநகரில் சூரமங்கலம், அம்மாபேட்டை, பொன்னம்மா பேட்டை, செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, அரிசிபாளையம் ஆகிய இடங்களில் தெருக்கள், சந்துகள் தோறும் தேங்காய் சுடும் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. தேங்காய் சுடும் பண்டிகையை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மாநகரில் போலீஸ் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது. மேலும், தீ விபத்துக்களை தடுக்கும் வகையில், தீ அணைப்பு நிலையங்களில் வீரர்கள் தயாராக இருந்தனர். ஆனால், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் அமைதியாக தேங்காய் சுடும் பண்டிகை நடந்து முடிந்தது. நேற்று தேங்காய் சுடும் பண்டிகையை முன்னிட்டு, கோட்டை மாரியம்மன் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் புதுமணத்தம்பதிகளின் கூட்டம் அலைமோதியது. அதை அடுத்து, போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.