பதிவு செய்த நாள்
18
ஜூலை
2014
10:07
ஈரோடு: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து, புனித நீர் கொண்டு வந்து, சோழீஸ்வரருக்கு, தாங்களாகவே அபிஷேகம் செய்தனர். ஈரோடு, காவிரிக்கரையில் சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாத பிறப்பு, ஆடி, 18 உள்ளிட்ட பல்வேறு நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடப்பது வழக்கம். ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று இக்கோவிலில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் நடந்தன. இதுகுறித்து கோவில் அர்ச்சகர் சுந்தரேசன் கூறியதாவது: ஆடி மாத பிறப்பான இன்று (நேற்று) தட்சிணாயன புண்ய காலம் துவங்கியது. ஆண்டுதோறும் ஆடி மாத பிறப்பன்று, பக்தர்களே இங்குள்ள புஷ்பநாயகி உடனமர் வில்வேஸ்வரருக்கு, 1,008 குடங்களில் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து, தாங்களாகவே அபிஷேகம் செய்வர். அபிஷேகம் முடிந்ததை தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜை, அர்ச்சனை, அன்னதானம் நடக்கும். இதே போல், ஆடி, 18 தினத்தன்று, காவிரி கரைக்கு வரும் பக்தர்கள் முதலில் காவிரி கரையிலேயே, குல தெய்வ வழிபாடு, கன்னிமார் பூஜைகளை முடிக்கின்றனர். அதன் பின், சோழீஸ்வரரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஆடி மாத பிறப்பன்று, வேறு எங்கும் பார்க்க முடியாத வகையில், பக்தர்களே சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, இங்கு மட்டுமே நடப்பது சிறப்பாகும். சிவனை அபிஷேக பிரியர் என்பர். பக்தர்களே தங்கள் கையால் அபிஷேகம் செய்ய, வாய்ப்பு கிடைப்பதால், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அபிஷேக நீரை எடுத்து வந்தனர், என்றார். இதே போல் பவானி, கொடுமுடி உள்ளிட்ட இடங்களில், புதுமண தம்பதியினர், அதிகாலையிலேயே ஆற்றில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் தேங்காய் சுடும் விழா வீடுகளில் நடந்தது.