பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
12:07
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில் நடக்கவுள்ள ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, பக்தர்களுக்காக, மலைப்பாதையில் மருத்து முகாம் அமைக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இங்கு, ஜூலை 26ல் ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. இதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் வரத்துத்துவங்கிவிடுவர். அமாவாசை முடிந்து இருநாட்கள் வரை பக்தர்கள் வருகை இருக்கும்.ஆலோசனைக்கூட்டம்: 6 நாட்களுக்கு மேலாக நடைபெறும் இத்திருவிழாவிற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம், மலையடிவாரமான தாணிப்பாறையில் நடந்தது. விருதுநகர் எஸ்.பி., மகேஷ்வரன் தலைமை வகித்தார். மதுரை ஏ.டி. எஸ்.பி., கோபால்சாமி, விருதுநகர் வனஅலுவலர் அசோக்குமார் முன்னிலைவகித்தனர். கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி வரவேற்றார்.மலைப்பாதைகளில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆங்காங்கு சாதாரண உடையில் போலீசாரை நியமிக்கவும், அடிவாரம், மற்றும் மலைஉச்சியில், கோயில் வளாகங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் குழுக்களாக பிரித்து போலீசாரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. மலைப்பாதையில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அத்துறையின் சார்பில் மலைப்பாதையின் இடையில் இரு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.பீடி, சிகரெட்டிற்கு தடை: பக்தர்கள் மலைக்கு தீப்பெட்டி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபாட்டில்கள் போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதித்துள்ள வனத்துறையினர், பக்தர்களை அடிவாரத்திலேயே சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.