பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 30 ல் நடக்கிறது. இத்திருவிழாவையொட்டி கடந்த 20 ம் தேதி இரவு, ஆண்டாள் பிறந்த இடமான நந்தவனம் துளசி மாடத்தில், பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்கான கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி, 4 மாடவீதிகள் வழியாக வரப்பட்டு, தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. விஜி பட்டர் சிறப்பு பூஜை செய்தார். அதன்பின், தேரில் கும்ப கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தக்கார் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் காளிமுத்து, முரளீதரன் டி.எஸ்.பி., செயல் அலுவலர் ராமராஜா, வேதபிரான்பட்டர் ஸ்தானிகம், ரமேஷ், கவுன்சிலர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவில் 16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான 5 கருட சேவை ஜூலை 26 லும், தேரோட்டம் 30ம் தேதி காலை 9:05 மணிக்கும் நடக்கிறது.