பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
11:07
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில், சோழர் கால சிலை மற்றும் விஜய நகர பேரரசு கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், நாச்சியார் குளம் செல்லியம்மன் கோவில் பகுதியில், தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் தியாகராஜன், ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு, கி.பி., 11ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டது. மேலும், சோழர் கால பெண்ணரசி, மகிஷாசுரமர்த்தினி, பைரவர், துர்க்கை உள்ளிட்ட சிற்பங்களையும் கண்டறிந்தனர்.
அவற்றை ஆய்வு செய்த, தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் தியாகராஜன் கூறியதாவது: பெண் அரசி சிற்பம் நின்ற கோலத்தில், கூப்பிய கரங்களுடன் உள்ளது. பெண் சிலையின் தலைமுடி அலங்காரம், அணி, மணிகள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தின் வடிவம் மற்றும் முக அமைப்பின் அடிப்படையில், இது சோழர் கால பெண்ணரசியின் சிற்பமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு கிடைத்துள்ள பிற சிற்பங்களும், சோழர் காலத்தை சேர்ந்தவை. இதுபோன்ற சிற்பங்கள், கும்பகோணம் அருகே தாராசுரம், திருநல்லம், கோனேரிராஜபுரம் கோவில்களில் உள்ளன. முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி, மகள்கள், முதலாம் குலோத்துங்கன் மகள் ஆகியோரை பற்றிய குறிப்புகள், கல்வெட்டுகளில் உள்ளன. நாச்சியார், ஆச்சியார், நம்பிராட்டியார், தங்களாச்சியார் போன்ற சொற்கள், சோழர்கால அரசியர்களை குறிப்பிட வழங்கப்பட்டவை. கல்வெட்டுகளில், சோழ மன்னர் ஒருவரின் மூன்றாம் ஆட்சியாண்டில் எழுதப்பட்ட, இரண்டு துண்டுகள் கிடைத்துள்ளன. இது, முப்பட்டை குமுதப்பகுதியில் எழுதப்பட்டு உள்ளது. இதில், ’திருத்தளிக் குளமுடையான் அரையன் வெண்காடன்’ என்பவர் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், 12 காசுகள் கொடை வழங்கிய செய்தியும், அதற்காக, ஆண்டுக்கு, எட்டு காசுகள் வட்டியாக வாங்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப்படுகிறது. இதை கொடுக்காவிட்டால், தளையிட்டு (கைவிலங்கு), தண்டி வசூல் செய்து கொள்ளலாம் என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள செல்லியம்மன் கோவில் உட்கூரையில் கட்டப்பட்டுள்ள கற்பலகையில், விஜயநகர பேரரசு கால கல்வெட்டு எழுதப்பட்டு உள்ளது. இக்கல்வெட்டின் தொடக்க வரிகள் மறைந்துள்ளன. இவ்வூரில், வணிக குழுவினரான, பதினெண் விஷயத்தார், செட்டிகள், கைக்கோளர்கள் உள்ளிட்ட பல பிரிவினர், கோட்டையில் குடியேற்றப்பட்டது பற்றியும், அவர்களிடமிருந்து யாதவ தேவர் என்ற அதிகாரி, வரி வசூலித்த முறை பற்றியும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் அழிந்த பின், புதிதாக வணிகர்கள் இங்கு குடியமர்த்தப்பட்டு, விஜயநகர காலத்தில் பேட்டை அமைக்கப்பட்டதை, இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.