பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
11:07
வேலூர்: வேலூர் மாவட்டம், குக்கிராபள்ளி கிராமத்தில், 5ம் நூற்றாண்டை சேர்ந்த சமண துறவிகளின் படுகையை, சமண ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் சாலையில் குக்கிராபள்ளி கிராமம் உள்ளது. இங்குள்ள பைரவ மலையில், 1,000 அடி உயரத்தில், 14 சமண படுகைகள் இருப்பதை, சமண ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில், ஒரே இடத்தில் 9 படுக்கைகளும், மற்றவை தனித்தனி படுக்கைகளாகவும், அருகில் சுனை (வற்றாத ஊற்று), இரண்டு கால் பாதங்கள் அமைந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி, திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சமண ஆய்வாளர் ஜீவகுமார் கூறியதாவது: தமிழகத்தில், பல இடங்களில் சமணர் படுகைகள் உள்ளன. சமண துறவிகள் வாழ்ந்த இடம், ’பள்ளி’ என, அழைக்கப்பட்டது. இதனால், குக்கிராபள்ளி என பெயர் பெற்றுள்ள இந்த பகுதியை, ஆய்வு செய்தோம். இங்குள்ள பைரவ மலையில், 14 சமணர் படுக்கைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். இவை, கி.பி., 5ம் நூற்றாண்டை சேர்ந்தவை. சமண துறவிகள், மலைப்பகுதியில் படுகைகள் அமைத்து, அங்கேயே தங்கி, மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். கி.பி., 5ம் நூற்றாண்டில், இந்த இடம் சமணர்களின் முக்கிய மையப்பகுதியாக விளங்கியிருக்கலாம். ஆகவே, பழமையான இந்த மலைப்பகுதியில் உள்ள, சமணர் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும், என்றார்.