பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
10:07
சதுரகிரிமலை : சதுரகிரி கோவில்களில், ஜூலை 26ம் தேதி, ஆடி அமாவாசை பூஜை நடைபெற உள்ளது. விழாவிற்கான, முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மதுரை மாவட்டம், சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதியில், சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளன; இக்கோவில்களை, இந்து சமய அறநிலையத் துறையினர் நிர்வகிக்கின்றனர். இங்கு, ஆடி அமாவாசை தரிசனம் சிறப்பு வாய்ந்தது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் சுப்பிரமணியன், மலைப்பாதையில் ஆய்வு செய்தார். மலையில், குடிநீர், தங்கும் கூடாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பக்தர்கள், நேற்று முதல் மலையேற துவங்குவர். ஜூலை 26ல், அமாவாசையை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் ராஜஅலங்காரத்தில் அருள்பாலிப்பார். அன்று அதிகாலை, 5:00 மணி முதல், காலை 6:30 மணி வரை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின், எஸ்.பி., விஜயேந்திரபிதரி, ’தினமலர்’ நிருபரிடம் கூறியதாவது: ஜூலை 24 முதல் ஜூலை 27 வரை, மலைப்பாதையில், கூடுதல் எஸ்.பி., மற்றும் ஆறு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அடிவாரம், வழுக்குப்பாறை, சதுரகிரிமலை என, மூன்று இடங்களில், மருத்துவ முகாம், தீயணைப்பு முகாம் அமைக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.