பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
11:07
ராசிபுரம்: சவுரிபாளையம் கிராமத்தில் நடந்த கிறிஸ்துவர் தேர்திருவிழாவில், மூன்று மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்துவர்கள் பங்கேற்று பக்தி பரவசத்தில் விழா எடுத்து கொண்டாடினர். ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் அடுத்த, மதியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சவுரிபாளையத்தில், மரிய மதலேனாள் தேவாலயத்தில், குழந்தை பேறு, உடல், மன நோய் நீங்கல், தீய சக்தி பிடியில் இருந்து விடுதலை ஆகியவற்றிற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம், திருவிழா நடத்தப்படும். அதையடுத்து, கடந்த, 13ம் தேதி கொடியயேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும், நவநாள், திருப்பலி, மறையுரை, கூட்டுத் திருப்பலி, நற்கருணை ஆராதனை, இன்னிசை நிகழ்ச்சி, தேர்பவனி போன்றவை நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, திருப்பலி, ஆயருக்கு வரவேற்பு, ஆடம்பர திருப்பலி, ஜெப வழிபாடு, கூட்டு பாடல் திருப்பலி, இரவில் குணமளிக்கும் ஜெப வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, நள்ளிரவு, 12 மணிக்கு மேல், புனிதையின் ஆடம்பரத் தேர்ப் பவனி நடந்தது. இதில், புனித மதலேனாள், புனித பிரான்சிங்கு சவேரியார், புனிதவனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதனர், புனித மைக்கேல் சம்மனசு ஆகிய ஐந்து தேர்கள் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டு தேவாலாயத்தை சுற்றி தேர்பவனி நடந்தது. தமிழகம், கேரளம், கர்நாடகாவைச் சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர் பங்கேற்றனர். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பேய் ஆட்டம் ஆடினர். அவர்களை, புனித மைக்கேல் சம்மனசு தேரின் அருகில் நிறுத்தி வழிபாடு நடத்தி, அனுப்பி வைத்தார். விழாவில், நேற்று காலை, 6 மணிக்கு, நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடந்தது.