காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் உடையார்குடி மாரியம்மன் கோவிலில் ஆடிமாத பிரம்மோற்சவத்தையொட்டி தீ மிதி திருவிழா துவங்கியது. கொடியேற்றத்துடன் துவங்கியதைத் தொடர்ந்து, நேற்று காலை கரகம் எடுத்தலும், 12:00 மணிக்கு துவஜாரோகணம் நடந்தது. தொடர்ந்து 28ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 30ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது. முக்கிய விழாவான தீ மிதி திருவிழா 31ம் தேதி நடக்கிறது. விழாவைத் தொடர்ந்து காலை, செடல் காவடியும், அம்மன் புறப்பாடும் நடக்கிறது. மாலை 5:00 மணியளவில் தீ மிதி உற்சவம் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.