பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், ஐந்து நாட்களாக நடந்த ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, நேற்றுடன், முடிவடைந்தது. திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்ப திருவிழா, கடந்த, 19ம் தேதி துவங்கி, நேற்று மூன்றாம் நாள் தெப்பத்துடன் நிறைவடைந்தது. மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சரவணப்பொய்கை திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். பின் உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு தெப்பத்தில், ஏழு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். நேற்றுடன் இந்தாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா நிறைவடைந்தது. தெப்பத்தில் முதல்வர் நடித்த சினிமா பாடல்கள்: திருத்தணி முருகன் கோவிலில் நடந்த, 2ம் நாள் தெப்ப திருவிழாவில், இன்னிசை கச்சேரி நடந்தது. இதில், பாடகர் மாணிக்க விநாயகம் மற்றும் நிஷா, ஸ்ரீஷா ஆகியோரின் கச்சேரி நடந்தது. இதில், இரண்டு பெண்களும் சுடிதாருடன் தெப்பலில் பாடினர். மேலும், பக்தி இன்னிசை கச்சேரியில், முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., நடித்த ’நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற’ அம்மா நீங்க நல்லாயிருக்கனும், காவேரி தந்த தாயே போன்ற வாசகங்களால் முதல்வரை புகழ்ந்து பாடினர்.