மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் நேதாஜி ரோடு நடைபாதை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டின் ஒருபகுதியில் டூவீலர்கள் நிறுத்த போலீசார் அனுமதியளித்துள்ளனர். ஜான்சிராணி பூங்காவில் இருந்து நேதாஜிரோடு வழியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையில் நடக்கக்கூட இயலாதபடி தள்ளுவண்டி கடைகளை பரப்பி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். பிளாட்பாரத்தில் அடுப்பு வைத்து சிலர் டிபன் சென்டர்களை நடத்தினர். இதுகுறித்து ’தினமலர்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி, போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அருகில் உள்ள சந்துக்களை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளை வரிசையாக சில நாட்கள் நிறுத்தி வைத்தனர். தற்போது மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றிய சில நாட்கள் வரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். அவர்கள் சென்றதும் மீண்டும் அதே இடங்களில் தள்ளுவண்டிகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். கோயிலுக்கு செல்லும் முக்கிய வழித்தடம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடிக்கு செல்லாமல் தடுக்க வேண்டும்.