பதிவு செய்த நாள்
25
ஜூலை
2014
10:07
ராமேஸ்வரம்: பக்தர்கள் வசதிக்காக ஐம்பத்தி ஒரு ஆண்டுக்கு பின், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அம்மன் சன்னதி அருகில் மூடி கிடந்த வாசல் திறக்கப்பட்டது. 11ம் நூற்றாண்டில் உருவான, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 1959ம் ஆண்டு வரை, சேதுபதி மன்னர்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்களின் ’டிரஸ்ட்’ மூலம் நிர்வகிக்கப்பட்டது. பின், 1960ம் ஆண்டில், மாநில இந்து அறநிலைத்துறை கோயில் நிர்வாகத்தை தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது. அப்போது, கோயிலில் 2ம் பிரகாரத்தில் நிறுத்தி வைத்திருந்த கல்மண்டபம் அமைக்கும் பணி, 1963ம் ஆண்டில் மீண்டும் துவங்கியது. இதனால், பர்வதவர்த்தினி அம்மனை தரிசித்து தெற்குபுறத்தில் இருந்த வாசல் வழியாக வெளியேறி, 2ம் பிரகாரத்தை கடந்து வெளியில் செல்லும் பக்தர்களுக்கு, கற்களால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் எனக் கருதி, அப்போதைய, இந்து அற நிலைத்துறை நிர்வாகம் அம்மன் சன்னதி தெற்கு புற வாசல் கதவுகளை மூடியது. ஆன்மிக மரபு மீறல்: இதனால், சுவாமிக்கு அர்த்த ஜாம பூஜை முடிந்து, பல்லக்கில் சுவாமி எழுந்தருளி, 2ம் பிரகாரம் வழியாக, அம்மன் சன்னதி தெற்கு வாசலில் சுவாமி நுழைந்து, பள்ளி அறைக்கு செல்ல முடியாமல் போனது. பின், ஆன்மிக மரபுகளை மீறி, அம்மன் சன்னதி கொடி மரம் வழியாக, சுவாமி பள்ளியறைக்கு சென்றார். இதற்கு ஆன்மிக பெரியோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்து அறநிலைத்துறை கண்டு கொள்ளவில்லை.
இதுகுறித்து, 2012ம் ஆண்டில் ராமேஸ்வரம் புரோகிதர் சிவராசன், இந்து அறநிலைத்துறை கமிஷனருக்கு புகார் செய்தார். இந்நிலையில், நேற்று கமிஷனர் உத்தரவுப்படி, 51 ஆண்டுகளாக மூடி கிடந்த அம்மன் சன்னதி அருகில் உள்ள தெற்கு நுழைவு வாசல் கதவுகள் திறந்து, கோயில் ஊழியர்கள் மராமத்து செய்தனர். நாளை முதல்(ஜூலை 26) அம்மன் சன்னதியில் தரிசிக்கும் பக்தர்கள், தெற்கு புற வாசல் வழியாக செல்லலாம் என, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.