வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை திருவிழா, நேற்று பிரதோஷ பூஜைகளுடன் துவங்கியது. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிமலை கோயில்களின் இந்த ஆண்டிற்கான அமாவாசை விழா, ஜூலை 26 ல் நடைபெறவுள்ளது. அதற்காக, நேற்றுமுதலே பக்தர்கள், சாதுக்கள் வரத்துவங்கி விட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்க கோயில் வளாகம் முழுவதும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் பலாவடி கருப்பசாமி கோயிலில் இருந்து முதலில் சுந்தரமகாலிங்கம் கோயில் சென்று தரிசனம் முடித்து, பின்னர் அங்கிருந்து எதிரே மற்றொரு மலையில் அமைந்துள்ள சந்தனமகாலிங்க சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்து, தங்க வேண்டியவர்கள் மைதானத்திற்கு செல்லும் படியும், மற்றவர்கள் நேராக வெள்ளைப்பாறை மடத்திற்கு சென்று கீழே இறங்கும் வகையிலும் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையின் இருபுறமும் இருந்த நடைபாதை கடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, பாதைகளை அகலப்படுத்தி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலையில் நடந்த பிரதோஷ பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா முழுவதும் விடுமுறை நாட்களில் வருவதால் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலைப்பாதையில் அத்தியூத்து சங்கிலிப்பாறை அருகே இந்த ஆண்டு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அடிவாரமான தாணிப்பாறையில் தமிழக அரசின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டது. அதனை மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் நேற்று துவக்கினார்.