பதிவு செய்த நாள்
25
ஜூலை
2014
11:07
பழநி: பழநி மலைக்கோயில் தங்கரத புறப்பாட்டை, உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஆன்- லைன் மூலம் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பழநி மலைக்கோயிலில் மட்டும் தான் தினமும் தங்கரத புறப்பாடு நடக்கிறது. இரவு 7 மணிக்கு தங்கரதம் புறப்பாடாகி, வெளிப்பிரகாரத்திலுள்ள 10 உலா நிலைகளிலும், பூஜைகள் செய்யப்பட்டு, நிலையை அடையும். தங்கரதம் இழுக்க ரூ.2000 கட்டணமாக, அன்று மாலை 5 மணி வரை செலுத்தலாம். இத்துடன் சிறப்பு தரிசனச் சலுகை, பஞ்சாமிர்தம், காமாட்சி விளக்கு, தேங்காய் பழம், முருகன் படம், வாலி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு எத்தனை பக்தர்கள் பணம் கட்டியிருந்தாலும், தங்கரதம் ஒரு முறை மட்டுமே வெளிபிரகாத்தில் உலா வருவது சிறப்பம்சமாகும்.
ஆன்-லைனில் தங்கதேர்: தங்க ரத புறப்பாட்டை பக்தர்கள் ஆன் லைனில் கண்டுகளிப்பதற்காக, உலாநிலைகளில் நவீன ’அனலாக் கேமராக்கள்’ பொருத்தப்படுகிறது. விரைவில் இப்பணிகள் முடிந்தவுடன், ’இன்டர்நெட்’ வுடன் இணைக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஆன்-லையனில் தங்கரதபுறப்பாட்டை கண்டுகளிக்கலாம். கூடுதல் கண்காணிப்பு கேமரா பழநி மலைக்கோயில் பாதுகாப்பிற்காக ஏற்கனவே ரூ.23 லட்சம் செலவில், யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார், வின்ச் ஸ்டேசன் அன்னதானக் கூடம், உள்ளிட்ட 65 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ரோப்கார் செல்லும் கம்பிவட பாதை, மற்றும் வெளிப்பிரகாரங்களில் ரூ.5 லட்சம் செலவில் கேமராக்கள் பொருத்தப்படுகிறது.