அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் ஆனதால் இன்று மண்டல பூஜை நடக்கிறது. இக்கோயில் கும்பாபிஷேக பணிகள் ரூ.5 கோடி மதிப்பில் 2013ல் துவங்கி நடந்தது. கடந்த ஜூலை 8ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 9 முதல் மண்டல அபிஷேக பூஜை துவங்கியது. தினமும் காலை மற்றும் பகலில் பல்வேறு அபிஷேகம், பூஜைகள் 46 நாட்கள் நடந்தன. இன்று மண்டல பூஜை நடக்கிறது. இதற்காக நேற்று கோயிலில் 2 கால யாகசாலை துவங்கியது. மாலை 5 மணிக்கு முதல்கால பூஜை நடந்தது.இன்று அதிகாலை 5 மணி முதல் 7.30 மணி 2ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. யாகசாலையில் புனித தீர்த்தங்கள் கொண்ட 1008 சங்குகள் வைத்து பூஜிக்கப்படுகிறது. யாகசாலை முடிந்த பின் மூலவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.