பதிவு செய்த நாள்
26
ஜூலை
2014
10:07
வத்திராயிருப்பு: பூலோக கயிலை’ என பக்தர்களால் போற்றப்படும் புகழ்பெற்ற மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதற்காக, ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். புராண காலத்தில் வாழ்ந்த 18 சித்தர்களும் ஒன்றாக சேர்ந்து இறைவனை வழிபட்ட சிறப்புடையது இம்மலை. விருதுநகர் மற்றும் மதுரைமாவட்டங்களில் அமைந்துள்ளது. சித்தர்களின் வேண்டுகோளை ஏற்று இறைவன் அவர்களுக்கு இங்கு நேரில் வந்து காட்சி கொடுத்தது ஆடி அமாவாசை தினமாகும். எனவே, இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு இத்திருவிழா இரு தினங்களுக்கு முன் பிரதோஷ பூஜைகளுடன் துவங்கியது.
அதிகாலை 5.30 மணிக்கு மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து சுந்தரமகாலிங்கசுவாமிக்கு நாகாபரண அலங்காரமும், சந்தனமகாலிங்க சுவாமிக்கும், சுந்தரமூர்த்தி சுவாமிக்கும் ராஜஅலங்காரமும், நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் வருகை துவங்கியது. மலையிலும், அடிவாரப்பகுதிகளான வாழைத்தோப்பு, தாணிப்பாறை அதனை சுற்றியுள்ள வயல்வெளிகள், தோப்புகளிலும் ஏராளமானோர் தங்கியுள்ளனர். மதுரை, விருதுநகர், தேனி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், கோவில்பட்டி, திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உட்பட பல்வேறு நகரங்களிலிருந்தும் மலையடிவாரத்திற்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.