பாகூர் : பாகூர் எல்லை பிடாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பாகூர் எல்லை பிடாரியம்மன் கோவிலில், பிரம்மகி, வராகி, இந்திராணி, பிடாரி, சாமுண்டி, வைஷ்ணவி, மகேஷ்வரி ஆகியோர், சப்த கன்னிகளாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இங்கு, ஆடி மாத இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு, நேற்று காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 1.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் தியாகராஜன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை செந்தில்குமார், முருகன், சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய விழா குழுவினர் செய்திருந்தனர்.