ரமலான் மாதத்தில் பல நல்ல சிந்தனைகளைப் பார்த்தோம். அவற்றைக் கடைபிடிக்க உறுதியெடுப்போம்.இவ்வுலகில் மூன்று விழிகள் நரகத்தைப் பார்க்காது என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
* இறைவழியில் போர் புரிவதற்காக விழித்திருந்த கண்கள்
* இறைவனின் பயத்தால் கண்ணீர் வடித்த கண்கள்
* எவற்றைப் பார்க்கக்கூடாது என்று மார்க்கத்தால் தடைவிதிக்கப்பட்டதோ அவற்றைப் பார்க்காத கண்கள். ஆனால், இன்று பலரும் பயனற்ற டிவி காட்சிகள், சினிமா, பொழுதுபோக்கு என்ற பெயரால் விரயம் செய்கிறார்கள். இதை விடுத்து, மார்க்கப்பற்றுடன் குர்ஆன் ஓதுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அண்ணல் நாயகம் நமக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அது என்ன தெரியுமா? "தீர்ப்பு நாளில் அதிகாரிகளையும், அநியாயக்காரர்களையும் ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தின் மீது வானவர்கள் கொண்டு நிறுத்துவார்கள். இவர்களை நரகத்தில் தள்ளுங்கள் என்று இறைவனின் ஆணை பிறக்கும்” என்கிறார்கள். இதை மனதில் கொண்டு, நோன்பு காலத்தில், நமக்கு கிடைத்த இந்த சிந்தனைகள் மூலம், நல்ல பாதையில் செல்வோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26