பதிவு செய்த நாள்
28
ஜூலை
2014
10:07
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், அப்பர் கயிலை காட்சி உற்சவ விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமுனைபாடி நாட்டில், திருவாமூரில் புகழனாருக்கும், மாதினியாருக்கும் திலகவதியாரின் தம்பியாக பிறந்தவர் அப்பர். சூளை நோய் தவிர்த்து திருநாவுக்கரசரானார். திருநாவுக்கரசர் தலயாத்திரை மேற்கொண்டு கயிலை சென்றார்.இடையில், இறைவன் முனிவர் வடிவில் வந்து, ‘உம்மால் முடியாது, பக்கத்திருந்த பொய்கையில் மூழ்கச் செய்து பழுதில் சீர் திருவையாற்றில் காண்’ என்று பணித்தார். அவ்வாறே, ஆடி அமாவாசை நாளில் ஐயாற்றுத் திருக்குளத்தே வந்து எழுந்தருளினார். கயிலைக் காட்சியளித்த, ஐயாற்று ஆலயத்தைக் கண்டு, ‘மாதர் பிறைக் கண்ணியானை’ என தொடங்கும் பதிகம் பாடி மகிழ்ந்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், நேற்று முன்தினம் கயிலை காட்சி நடந்து. இதில், காலை காவிரி ஆற்றில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி ஐயாறப்பரை தரிசித்து, ஆலயத்தில் வழிபட்டு சென்றனர். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. இரவு, அப்பர் சந்நதியில், சிவபெருமான் காட்சி கொடுக்கும், கயிலை காட்சி உற்சவம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிப்பட்டனர்.