பதிவு செய்த நாள்
28
ஜூலை
2014
11:07
ஓசூர்: ஓசூர் அடுத்த தோகாரே அக்ரஹாரம் கிராம மக்கள், மழை பெய்ய வேண்டி, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து, சீர்வரிசைகள் வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இரு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், பல கிராமங்கள் உள்ளன. இங்கு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, பருவமழை பொய்த்து வருவதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் பிரச்னையும் உள்ளது.
குறிப்பாக, ஓசூர் அடுத்த தளி சட்டசபை தொகுதி, தேவகானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தோகாரே அக்ரஹாரம் கிராமத்தில், வறட்சியின் காரணமாக, தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.இந்நிலையில், தோகாரே அக்ரஹாரம் கிராமத்தில், மழை பெய்து செழிக்க வேண்டி, அப்பகுதி மக்கள், வருண பகவானை மகிழ்விக்கும் வகையில், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று காலை முதலே, தேவகானப்பள்ளி பஞ்சாயத்து நிர்வாகம் உதவியுடன், தோகாரே அக்ரஹாரம் கிராமத்தில், மா இலைகள் மற்றும் தோரணங்களை கட்டி, திருமண வேலையில், கிராம மக்கள் இறங்கினர். மேலும், ஆண் மற்றும் பெண் கழுதையை, ஊரின் பொது இடத்துக்கு அழைத்து வந்த பொதுமக்கள், அவற்றுக்கு, பட்டு வேட்டி மற்றும் பட்டுச் சேலையை அணிவித்தனர். பின், மங்கள வாத்தியங்கள் முழங்க, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக கழுதைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்ற பொதுமக்கள், ஆரத்தி மற்றும் சீர்வரிசைகளை வழங்கினர்.பின், திருமண விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு, விருந்து வழங்கப்பட்டது.