ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை (ஜூலை 30ல்)ஆடிப்பூர தேரோட்டம் நடக்கிறது. ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. விழாவின் முதல்நாளன்று கொடியேற்றமும், 16 கால் சப்பரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மங்களாசாசனமும், ஐந்து கருட சேவையும் கடந்த 26ம் தேதி நடந்தது. விழாவின் ஏழாம் நாளான நேற்று இரவு 8 மணிக்கு கிருஷ்ணன்கோவிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான பூரநட்சத்திரத்தையொட்டி நாளை காலை 9.05 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, திரு நெல்வேலி, சங்கரன்கோவில், விருதுநகர் உட்பட பல பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.