பதிவு செய்த நாள்
29
ஜூலை
2014
12:07
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், கடந்த மாதம், ஒன்பதாம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம், நிறைவு விழா நடந்தது. மண்டலாபிஷேக நிறைவு விழாவுக்காக, கடந்த, 25ம் தேதி மாலை, பெங்களூரு அருண்மாதவன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், 26ம் தேதி முனைவர் சென்னியப்பனார் பக்தி சொற்பொழிவும் நடந்தது. 48வது நாளான நேற்று முன்தினம், காலை, சங்கமேஸ்வரருக்கு ருத்ர ஹோமம், பூர்ணாஹுதி, மகா அபிஷேகமும், வேதநாயகி அம்மனுக்கு, ஒன்பது மலர்களால் நவசக்தி அர்ச்சனையும், ஸ்ரீஆதிகேசவ பெருமாளுக்கு சுதர்சன ஹோமம், பூர்ணாஹுதி, கோவிலில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், மஹா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, அன்னதானமும் நடந்தது.இரவில், புதுடில்லி, தமிழ் சங்கம் குரு கலைவாணி ராஜ்மோகனின் சங்கமித்ரா நாட்டியாலயா குழுவினரின், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது.எம்.எல்.ஏ., நாராயணன், நகராட்சி தலைவர் கருப்பணன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், ஈரோடு மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி, குமாரபாளையம் நகராட்சி தலைவர் தனசேகர், அக்னி ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.