பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
11:07
திருப்பூர்: செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் நகரின் காவல் தெய்வமான, செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. 22ம் தேதி, பூச்சாட்டு, கணபதி ஹோமம், கொடியேற்றம், சக்தி கரகம் அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 23ம் தேதி, தங்கையின் திருமணத்துக்கு, அண்ணன் கொடுக்கும் சீர்வரிசையாக, வீரராகவ பெருமாள் கோவிலிருந்து, சீர் வரிசைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. அதன்பின், தினமும் கோட்டை முனியப்பன் கோவிலிலிருந்து சூலம் எடுத்து வருதல், டவுன் மாரியம்மன் கோவிலிலிருந்து பூவோடு எடுத்தல், ஆடி அமாவாசையன்று, கொடுமுடி தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம் ஆகியன நடந்தது. விழாவையொட்டி மீனாட்சியம்மன் , சமயபுரம் மாரியம்மன், அங்காளம்மன், சவுடேஸ்வரி அம்மன் அலங்காரங்களில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று காலை 6.00 மணிக்கு துவங்கியது. முதலில் பூசாரி குண்டம் இறங்கினார். அதன்பின், அம்ம<னுக்கு விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்குதலுக்கு பின், அக்னி அபிஷேகம், மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம் 12.00 மணிக்கு அன்னதானமும், மாலை 6.00 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலாவும் நடந்தது.இன்று காலை, சிறப்பு அபிஷேகம், கொடி இறக்குதல், அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம், மஞ்சள் நீராட்டு உள்ளிட்டவை நடக்கின்றன.