மேல்மருவத்தூர் : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா, நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. விழாவையொட்டி ஆதிபராசக்தி அன்னைக்கும், சுயம்புவிற்கும் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு அம்மனை வழிபட்டனர். மாலை, 5:00 மணிக்கு கருவறை முன்பாகவும், புற்று மண்டபம் முன்பாகவும் அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். நேற்று காலை, பக்தர்கள் கொண்டு வந்த கஞ்சி, பிரசாதமாக வினியோகிக்கப்பட்டது. காலை 11:30 மணிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலையில், பங்காரு அடிகளார் பாலாபிஷேக நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பாலாபிஷேக விழா ஆடிப்பூரமான இன்று மாலை வரை தொடர்ந்து நடைபெறுகிறது.