பதிவு செய்த நாள்
30
ஜூலை
2014
11:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவில், 10 ஆயிரம் பேர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 28ம் தேதி இரவு, 8:00 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பு நடந்தது. குண்டத்திற்கு கோவில் பூசாரி சிறப்பு பூஜை செய்து, பூ பந்து உருட்டி விட்டு, காலை 6:00 மணிக்கு, முதலில் குண்டத்தில் இறங்கினார். முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், திருநங்கைகள் என, 11:00 மணி வரை, 10 ஆயிரம் பேர், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று மாவிளக்கு படைத்தல், அலகுகுத்தி தேர் இழுத்தல், அம்மன் திருவீதி உலாவும்; நாளை, அம்மன் சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், வாண வேடிக்கையும் நடக்கிறது. ஆக., 1ம் தேதி மஞ்சள் நீராட்டு, 3ம் தேதி ஆடிப்பெருக்கு, 4ம் தேதி திருவிளக்கு பூஜை, 5ம் தேதி மறுபூஜை நடக்கிறது.