பதிவு செய்த நாள்
31
ஜூலை
2014
12:07
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்தும், தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.திருத்தணி முருகன் கோவிலில், நேற்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:20 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவர் பெருமானுக்கு, 108 குடம் பால்அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, தங்கதேரில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆடிப்பூர விழாவை ஒட்டி, சென்னை வண்ணாரபேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை, மண்ணடி, புளியந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே, திருத்தணிக்கு வந்து தேவஸ்தான குடில்கள், தனியார் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கினர். நேற்று காலை, 8:00 மணி முதல், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடல் முழுவதும் அலகு குத்தியும், மலர் மற்றும் மயில்காவடிகள் எடுத்து சரவணபொய்கையில் புனித நீராடி மலைப்படிகள் வழியாக சென்று, மூலவரை தரிசித்தனர்.மேலும், சில பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றும் வழிபட்டனர். நேற்று மட்டும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், நான்கரை மணி நேரம் பொது வழியில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மாவட்ட எஸ்.பி., சரவணன் உத்தர வின் பேரில், 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காஞ்சி அம்மன் கோவில்களில் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜையும், வழிபாடும் நேற்று நடந்தன.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலிலிருந்து, கோனேரிகுப்பம் கனக துர்க்கை அம்மன் கோவிலுக்கு, 30வது ஆண்டு, 108 பால்குட விழா நடந்தது. இந்த ஊர்வலம் செங்கழுநீரோடை வீதி, பூக்கடை சத்திரம் வழியாக கோனேரிகுப்பம் கோவிலுக்கு சென்றடைந்தது. இங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை, காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். காமாட்சி அம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள சிறப்புற்று விளங்கும் ஆதிகாமாட்சி அம்மன் கோவிலில், மூலவருக்கு நேற்று காலை 6:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அலங்காரம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு, அன்ன வாகனத்தில் நான்கு ராஜ வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11:00 மணிக்கு மீண்டும் கோவிலை சென்றடைந்தார். மாலை 6:00 மணிக்கு மூலவர் ஆதிகாமாட்சி அம்மன், மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்போரூர் : திருப்போரூரில், 22ம் ஆண்டு 208 பால்குட விழா நேற்று விமரிசையாக நடந்தது. பக்தர்கள் வேம்படி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக பால்குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.காட்டூர், செம்பாக்கம், நெல்லிக்குப்பம் கோவில்களிலும் ஆடிப்பூர மகா அபிஷேகம், தீபதுாப ஆராதனை நடந்தது. மேலக்கோட்டையூர் தேவி கருமாரியம்மன் கோவிலில், பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர். அம்மன் விசேஷ அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார், சவுந்தரவள்ளி தாயார் உடனுறை பூதபுரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று, காலை சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். குழந்தைகளை தொட்டிலில் போட்டு, சுற்றிவந்து, வழிபட்டனர். ஸ்ரீபெரும்புதுார் திருமங்கையாழ்வார் தெருவில், எழுந்தருளி உள்ள, தேவி கருமாரியம்மன் கோவிலில், காலை 9:00 மணிக்கு, பால் அபிஷேகமும், அதைதொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.சுங்குவார்சத்திரம் அடுத்த, மாம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஓம் ஸ்ரீஊமாரி அம்மன், கோவில் வளாகத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பெண்கள், கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.