சபரிமலை : நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை இரவு பத்து மணி வரை நடை திறந்திருக்கும். ஆண்டின் முதல் போக சாகுபடி முடிந்ததும் விளையும் தானியங்களை கோயிலில் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பூஜை நிறை புத்தரி பூஜை. சபரிமலையில் எல்லா பூஜைகளும் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டாலும், நிறை புத்தரி பூஜை திருவிதாங்கூர் அரண்மனையில் முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டு பூஜை நாளை நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை இன்று மாலை 5.30-க்கு திறக்கிறது. இன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. நாளை காலை 5 மணிக்கு நடை திறந்து வழக்கமான நிர்மால்யதரிசனம், நெய்யபிஷேகம், கணபதிஹோமம் போன்றவை நடைபெறும். காலை 5.30 முதல் 6.30-க்குள் நிறைபுத்தரி பூஜை நடைபெறும். அறுவடை செய்த நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி எடுத்து வந்து ஐயப்பனுக்கு முன் வைத்து பூஜிக்கப்படும்.அந்த நெற்கதிர்கள் கோயிலை சுற்றி அலங்காரம் செய்யப்படும். நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பூஜைகள் முடிந்து நாளை இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.அதன் பின்னர் ஆவணி மாத பூஜைக்காக ஆக.,16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கும். அன்று அடுத்த ஒரு ஆண்டுகாலத்துக்காக தந்திரியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்பார்.