காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி, நேற்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.கடந்த 21ம் தேதி இக்கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் ஆரம்பமானது. தினமும் ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் ஆண்டாள் திருவடி கோவிலுக்கு சென்று வருவார். பத்தாம் நாள் அவரது அவதார நட்சத்திரத்தில் நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோர் திருவடி கோவிலுக்கு சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். கோவில் திரு முற்றவெளி நான்கு கால் மண்டபத்தில், பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் திருகல்யாணம் நடந்தது. அதை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் முடிந்த பின் பெருமாள் - ஆண்டாள் கண்ணாடி அறையில் சேர்த்தி உற்சவம் நடந்தது. இந்த திருகல்யாண உற்சவத்தை தொடர்ந்து இன்று மாலை 5:30 மணிக்கு பெருமாள் தாயார்களுடன், ஆண்டாளும் மாடவீதி ஊர்வலம் நடக்கிறது.