பதிவு செய்த நாள்
01
ஆக
2014
11:08
கும்பகோணம்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, மகாமககுளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கும்பகோணம் கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவில், நாகேஸ்வர ஸ்வாமி கோவில், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் கோவில்களிலிருந்து, ஆடிப்பூர அம்மன் புறப்பாடாகி நகர முக்கியவீதிகள் வழியாக காசிவிஸ்வநாதர் கோவிலை வந்தடைந்தது. அங்கு பக்தர்களுக்கு நல்லெண்ணை, சீயக்காய் கொடுக்கப்பட்டது. புது வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. விவசாயம் செழிக்க பக்தர்கள் பலர் புதுநாற்று, புதுநெல் கொண்டு வந்து படையலிட்டனர். அதையடுத்து, மகாமககுளத்தில், அஸ்திரதேவர் எழுந்தருளி, தீர்த்தவாரி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம், பெரியகடைத்தெரு ராஜகோபால ஸ்வாமி கோவிலில், திருக்கல்யாண மகோத்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, திருமஞ்சனமும், மாலையில் மாலை மாற்றுதல் மற்றும் ஊஞ்சல் திருக்கல்யாண வைபவம் நடந்தது.