பதிவு செய்த நாள்
02
ஆக
2014
11:08
சபரிமலை : ஆண்டின் தொடக்கத்தில் விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளையும் விளைபொருட்களை, இறைவனுக்கு சமர்ப்பிக்கின்றனர். குறிப்பாக, நெல் முதல் போக சாகுபடியில் விளைச்சல் ஆனதும், அந்த நெற்கதிர்கள், கோவில்களில் இறைவனுக்கு படைக்கப்படுகிறது. கேரளாவில் சிறப்பு வாய்ந்த இந்த பூஜை, நிறை புத்தரி பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நிறை புத்தரி பூஜை, நேற்று நடைபெற்றது. இதற்காக, சபரிமலை நடை, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு திறந்தது. அன்று, வேறு எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், வழக்கமான பூஜைகளுக்கு பின், பாலக்காட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நெற்கதிர்கள், கோவில் முன்புறம் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன. அந்த கதிர்களை மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி தலையில் சுமந்து, கோவிலை வலம் வந்தார். ஸ்ரீ கோவிலுக்குள், அந்த நெற்கதிர்கள் பூஜிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நேற்று பூஜைகள் நிறைவு பெற்று, இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்பட்டது. இனி ஆவணி மாத பூஜைக்காக, வரும், 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அன்று, அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக, கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்கிறார்.