சின்னமனூர் : தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழாவில் சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குச்சனூர் சனீஸ்வரர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளது தனிச்சிறப்பு. இங்கு ஆடி மாதம் முழுவதும் சனிவாரங்களில் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆடித்திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடந்து வருகிறது. இரண்டு சனிவாரங்கள் முடிந்துள்ள நிலையில், நேற்று திருக் கல்யாண வைபவம் நடந்தது. காலையில் துவங்கி திருக் கல்யாண நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்தது. முதலில் உற்சவர் சன்னதியில் இருந்து அழைத்து வரப்பட்டு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடையில் அமர்த்தப்பட்டார். திருக்கல்யாண ஹோமம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது. பின்னர் நீலாதேவி அம்பாளை சக்தி குடமாக பாவித்து அழைத்து வந்தனர். சுவாமியும் அம்பாளும் திருக்கல்யாண கோலத்தில் நீலப்பட்டு உடுத்தி காட்சியளித்தனர். கோயில் தலைமை பூஜாரி திருமலை ஜெயபால் முத்து, மங்கள நாணை சுவாமி சனீஸ்வரரிடமிருந்து அம்பாள் நீலாதேவிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுரபி நதியில் நீராடி திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.