சிவபெருமானின் மேனிவண்ணம் பற்றிய குறிப்புகள் தேவாரப் பாடல்களில் உள்ளன. சுந்தரர் தன் பாடலில், பொன்னார் மேனியனே என்று சி வனைப் பொன் போல ஒளிர்பவராக குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர், பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறு அணிந்தவர் என பவளம் போல சிவந்தநிறம் கொண்டவராகப் பாடியுள்ளார். சம்பந்தர், காடுடையச் சுடலைப் பொடி என்னும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியதால், வெண்ணிறம் கொண்டவராகச் சித்தரிக்கிறார். ஆனால், சித்திரங்களில் சிவன் நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம். பாற்கடலில் எழுந்த விஷத்தைக் குடித்ததால், கழுத்தில் மட்டும் சிவன் நீலநிறம் கொண்டிருப்பார். இதனால் இவருக்கு நீலகண்டன் என்று பெயருண்டு. சிவனை நீலநிறத்தில் வரைவதற்கு சாஸ்திர, ஆகமங்களில் குறிப்பு ஏதுமில்லை.