பதிவு செய்த நாள்
19
ஆக
2014
11:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், குருக்கள் பற்றாக்குறையால், பல சன்னதிகள் மூடி கிடப்பதாக, தமிழக விஸ்வ இந்து பரிஷத் நிறுவனர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது: இந்துக்களுக்கு பாரபட்சமின்றி சலுகைகள் வழங்குதல்; நாடு முழுவதும் ஒரே மாதிரியான திருமண சட்டத்தை அமல்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, ஓசூரில், டிச., 28 ல், இந்துக்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க காஞ்சி சங்கராச்சாரியார், திருபனந்தாள், திருவாவடுதுறை, மதுரை ஆதீனங்கள் மற்றும் ஆன்மிக பெரியவர்களை அழைக்க உள்ளோம்.
ராமேஸ்வரம் கோயிலில் 52 குருக்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், 25 பேர் மட்டுமே இருப்பதால், தட்சிணா மூர்த்தி, பெருமாள், சேதுமாதவர், பைரவர் உள்ளிட்ட பல சன்னதிகள் மூடி கிடக்கிறது.அங்கு பூஜைகள் நடக்கவில்லை. இக்கோயிலில் 1986ம் ஆண்டில், திருடுபோன லட்சுமணர் சுவாமி ஐம்பொன் சிலையை கண்டறிய, கோயில் நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.தமிழகத்தில் ஆன்மிக மரபு தெரிந்தவரை தான் கோயில் அதிகாரியாக நியமிக்க வேண்டும். இல்லையேல், அவர்களுக்கு 6 மாத பயிற்சி அளிக்க வேண்டும். ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மன்னர் புலிதேவன் சிலை பராமரிப்பின்றி உள்ளது. அதை சுத்தம் செய்து, ஆண்டுக்கு ஒரு முறை விழா நடத்த வேண்டும். ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில் இயக்கவும், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும், தமிழக எம்.பி.,க்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.தமிழக மீனவர் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, பிரதமர் மோடி விரைவில் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். தமிழக விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி ராமசுப்பு, மாநில கோயில், திருமடங்கள் பாதுகாப்பு குழு நிர்வாகி சிவராசன் உடன் இருந்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :