பதிவு செய்த நாள்
21
ஆக
2014
12:08
தமிழகத்தை பொறுத்த வரை பண்டைய காலந்தொட்டு நீர் நிலைகள் தமிழர்களின்வாழ்வுடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. நீரை போற்றுவது மட்டுமின்றி, அந்நீரை தரும் மழை, மரங்கள், மலைகள், ஆறுகள் என அனைத்தையும் நம் முன்னோர்கள் வணங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே கோயில் குளங்கள் அனைத்தும் புனிததீர்த்தங்களாக மதிக்கப்பட்டு, பயபக்தியுடன் நம் மக்களால் இன்றளவும் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் மேம்பாட்டில் திருக்குளங்கள் : கோயில்களில் உள்ள குளங்களோ அல்லது கோயில்களை ஒட்டிய குளங்களோ, வெறும் நீர்நிலைகள் என்று ஒதுக்கி தள்ளி விட முடியாது. அவை அறிவியல் பூர்வமாக பூகோளவியல் பார்வையில் அமைக்கப்பட்டுள்ள அற்புதமான திருக்குளங்களாகும். ஆன்மிகம் சார்ந்தவையாக திருக்குள நீர்நிலைகளை நாம் அறிந்தாலும், சுற்றுச்சூழல் மேம்பாட்டில் அவற்றின் பங்களிப்பு போற்றுதலுக்குரியதாகும்.
விரிசல் கண்ட கட்டடங்கள் : மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரை குளத்தில் தண்ணீர் வறண்டு விட்டது என்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன் கோயிலை சுற்றியுள்ள பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதை நாம் அறிவோம். மிகப் பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் மழை நீர் சேமிப்பை முறைப்படி கையாளத் துவங்கி விட்டனர் என்பதற்கு கோயில் குளங்கள் நிதர்சன சாட்சி. பரந்து விரிந்துள்ள கோயில் வளாகத்தினுள் பொழியும் மழை நீரனைத்தும், கோயில் குளங்களில் வந்து சேரும் வண்ணம் உருவாக்கப்பட்ட கோயில்களின் கட்டமைப்பு, மிகச்சிறந்த பொறியியல் நுட்பம் வாய்ந்ததாகும்.
புனித நீரை தரும் பாங்கு : இக்குளங்கள் அனைத்தும் சதுர, செவ்வக வடிவில் நான்கு புறமும் படிக்கட்டுகளுடன், தண்ணீர் உள்வரும் வாய்க்கால்களும், வெளியேற்றும் கால்வாய்களும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக கோயிலுக்குள்ளே மழை நீரனைத்தும், வந்து சேருகிற குழியான இடத்தில் திருக்குளங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு சேமிக்கப்படும் தண்ணீருக்கான முதன்மை ஆதாரம் மழைநீர். இத்தண்ணீர் கோயிலுக்குள் உள்ள இறைச்சிற்பங்களை தூய்மை செய்யும் புனித நீராகவும், கோயில் வளாகத்தை தூய்மை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. குளங்களில் வளர்க்கப்படும் மீன்கள் குளத்தை தூய்மை செய்கின்றன. அந்நீர் நிலைகள் சார்ந்து பறவைகள், சிற்றுயிர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்கின்றன. கோயிலுக்குள் வரும் பக்தர்கள் தங்கள் பாதத்தை கழுவிய பின், கோயிலுக்குள் நுழைவதற்கும் இக்குளங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பொற்றாமரை குளத்திற்கு வந்த வைகை கோயிலை ஒட்டியுள்ள ஆறுகளிலிருந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் போது, திருக்கோயில் குளங்களுக்கும் அங்கிருந்து தண்ணீர் பெறும் வண்ணம் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. இதற்கு மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரை குளம் மிக சிறந்த எடுத்துக்காட்டு. ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை, வைகை ஆற்றின் நீரின் மூலம் பொற்றாமரை குளம் நிரப்பப்பட்டு வந்துள்ளது. ஆற்றில் தண்ணீர் வறண்டு விட்டால், ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட கிணறுகள் மூலமாகவும் பொற்றாமரை குளத்திற்கு நீர் தருவிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே வைகையாற்றுக்குள் உருவாக்கப்பட்ட கிணறுகள் இன்றைக்கும் சாட்சியாக திகழ்கின்றன. தெப்ப உற்சவமும்,அக்கோயில் சார்ந்த திருவிழாக்களிலும் திருக்குளங்கள் முதன்மையான பங்காற்றுகின்றன.
வண்டியூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள தெப்பக்குளத்தில் தைப்பூச திருநாளன்று நடக்கும் தெப்ப உற்சவம் உலக புகழ் பெற்றதாகும். எல்லா ஊர்களிலும் உள்ள தெப்பக்குளங்களில் நடக்கும் இதுபோன்ற தெப்ப உற்சவங்கள், தண்ணீரை போற்றி மகிழும் நம் மக்களின் பண்டைய மரபிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இறைகடமைக்கும் மேலாக திருக்குளங்களின் பயன்பாடு, அந்தந்தப் பகுதியின் நிலத்தடி நீராதார மேம்பாட்டிற்கும் உறுதுணை செய்கிறது என்பது சமீப கால முடிவுகளாகும்.
காணாமல் போன கால்வாய்கள் : மதுரையின் பெரும்பாலான திருக்குளங்களுக்கு வைகை மற்றும் கிருதுமால் ஆறுகளே நீரை வழங்கியிருக்கின்றன. இதற்குரிய நீர் வரத்து வழிகளும் இருந்துள்ளன. அவையெல்லாம் இன்றைக்கு ஆக்கிரமிக்கப்பட்டு, முழுவதுமாக காணாமல் போய் விட்டன. தமிழகத்தில் தற்போதுள்ள கோயில் திருக்குளங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 359. அவற்றை சரியான முறையில் செப்பனிட்டு, ஆண்டுதோறும் நீர் தேங்கியிருக்கும் வகையில் புனரமைப்பு செய்தால், திருக்குளங்களுக்கு நாம் ஆற்றும் ஆன்மிகத் திருப்பணியாகவும், நீராதாரங்களை செம்மை செய்த பொதுப்பணியாகவும் நம் புண்ணியக்கணக்கில் சேரும் என நம்பலாம்.
ஜோ.கனகவல்லி,
வயலக கண்மாய் மேம்பாட்டு இயக்கம்,
மதுரை. 94430 14080.