பதிவு செய்த நாள்
21
ஆக
2014
12:08
ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்திவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.இக்கோயிலில் உள்ள விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும்படி, மூலஸ்தானம் அமையப்பெற்றுள்ளதால், மூலவர் "வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். மேலும், ராமபிரானால் தரிசிக்கப்பட்ட கோயில் என்பதாலும், தமிழகத்திலே சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருமணம் நடைபெறும் இடமாகவும் இத்தலம் விளங்குவதாலும் மிகுந்த சிறப்புள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் சதுர்த்தி விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் செய்து, சிவாச்சாரியர்கள் ரவிக்குமார், ரத்தினம் கொடியேற்றினர். அதன்பின், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் தேவஸ்தான செயல் அலுவலர் சந்திரசேகர்,விசாரணைதாரர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் மாலை 6:00 மணியளவில், சிம்மம், மயில், யானை, ரிஷப, காமதேனு, குதிரை, சப்தாவர்ணம் வெள்ளி கோரதம் போன்ற வாகனங்களில் விநாயகர் வீதி உலா வருகிறார். 8 ம் நாளில் சித்தி, புத்தி ஆகிய இருதேவியர்களுடன் விநாயகர் திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடக்கிறது. கடைசி நாளான 10 ம் நாளில், சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.