ஆலய சுத்தம்: உழவாரத்திருப்பணியே... உத்தமத்திருப்பணி..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2014 11:08
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 151-வது உழவாரப்பணி 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு, சாத்தனஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள விருதாம்பிகை சமேத விருப்பாக்ஷீஸ்வரர் மற்றும் சீட்டணஞ்சேரி சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீகாலீஸ்வரர் கோவில்களில் நடைபெற உள்ளது. இத்திருப்பணியில் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இம்மையே நன்மை தரும் அம்மையப்பர் திருவருளும், நால்வர் பெருமக்களின் திருமுறை கலந்த பெருங்கருணையும் பெற்று அருளும்படியும், நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தும்படி இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் வேண்டிக்கொள்கிறது.
சிறப்பு: சுமார் 2500 ஆண்டு பழமையான இக்கோயில் முருகப்பெருமான் குமார தீர்த்தத்தை உருவாக்கி பூஜித்த சிறப்பு பெற்றது. மேலும் கிருஷ்ணர், பாண்டவர் மற்றும் பசு பூஜித்து பேறு பெற்றனர். .அத்துடன் இங்கு இரட்டை கொடிமரம், ஸ்தல விருட்சமாக மணிபுங்கவ மரம் அமைந்திருப்பதும், நந்தி தேவருக்கு சைலேந்தர் என்ற திருநாமம் இருப்பதும் சிறப்பு.
இருப்பிடம்: இத்திருக்கோயில் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் வில்லியம்பாக்கம் பஸ் ஸ்டாப் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பஸ்ரூட்: 129பி செங்கல்பட்டில் இருந்து அரும்புலியூர் - டி9 செங்கல்பட்டில் இருந்து பினாயூர். பஸ் நிறுத்தம்: சீட்டணஞ்சேரி
பிரதி மாதம் 4வது ஞாயிற்றுக்கிழமை சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் சுமார் 400 அடியார்களுடன் உழவாரப்பணிசிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதுவரை கடந்த 12 வருடங்களாக 150 திருக்கோயில்கள் இந்த மன்றத்தின் சார்பாக உழவாரப்பணி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 53 கோவில்கள் உழவாரப்பணிக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.