பதிவு செய்த நாள்
22
ஆக
2014
11:08
வெண்மணம்புதுார் : வெண்மணம்புதுார் விபூதீஸ்வரர் கோவிலில், நேற்று, 108 சங்காபிஷேகத்துடன், மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது. கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட வெண்மணம்புதுார் கிராமத்தில், சுகுந்த குந்தலாம்பாள் உடனுறை விபூதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த மாதம் 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்தது.அதன்பின், தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. மண்டலாபிஷேகம் நிறைவு நாளான நேற்று, காலை 8:30 மணிக்கு, சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. அதன்பின், பகல் 12:00 மணிக்கு, கோவிலில் அமைந்துள்ள விபூதீஸ்வரருக்கும், பரிவாரமூர்த்திகளுக்கும் 108 சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும் நடந்தது. மாலையில், மலர் அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.