பதிவு செய்த நாள்
22
ஆக
2014
12:08
பெங்களூரு : விநாயகர் சதுர்த்தி பண்டிகையை, பொது இடங்களில் கொண்டாடும் அமைப்புகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை, பெங்களூரு காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
விதிமுறைகள் : வரும், 29ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட உள்ளது. இதற்காக, இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தயாராகி வருகின்றனர். பண்டிகையை, பொது இடங்களில் கொண்டாடும் அமைப்புகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை, பெங்களூரு காவல் துறையினர் அறிவித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்பவர்கள், பந்தல்கள் அமைக்கும் போது, ’சிசிடிவி’ கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும். இதற்கான அனுமதியை, காவல் துறையினரிடம் முன் கூட்டியே பெற வேண்டும். போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் சிலைகளை வைக்க அனுமதியில்லை. விழாவுக்காக போடப்படும் பந்தல்களுக்கு, பி.பி.எம்.பி., அனுமதியும் பெற வேண்டும். சட்ட பிரச்னைக்குரிய இடங்களில் பந்தல்களை அமைத்து சிலைகளை வைப்பதற்கு முன், உண்மையான நில உரிமையாளர் அனுமதியை பெறுதல் அவசியம். எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில், விழா அமைப்பாளர்கள் கண்காணிப்பதோடு, பொறுப்பேற்கும் வகையில், 24 மணி நேரமும், இரண்டு தொண்டர்கள், விழா நடக்கும் இடத்தில் காவல் இருக்க வேண்டும். அவர்களை சுலபமாக அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கு, அடையாள அட்டைகள் மற்றும் டி சர்ட்டுகள் வழங்கப்பட வேண்டும்.
தடையில்லா சான்றிதழ்: பந்தல் அருகே, சமைப்பது தடை செய்யப்படுகிறது; அவசர கால தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். சிலைக்கு அருகில், எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் எதுவும் வைக்க கூடாது. விழா பந்தலை, மின் விளக்குகளால் அலங்கரிக்க நினைத்தால், பெஸ்காம் அனுமதி பெற வேண்டும். போக்குவரத்து துறை, தீயணைப்பு துறையினரிடம் தடையில்லா சான்றிதழ் கண்டிப்பாக பெற வேண்டும். பந்தலுக்கு அருகில், பட்டாசுகளை வெடிப்பது கூடாது. சிலைகளை, இரவு, 10:00 மணிக்குள் கொண்டு போய் கரைக்க வேண்டும். இரவு, 10:00 மணிக்கு மேல், ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. இவ்வாறு, காவல் துறை உத்தரவிட்டுள்ளது. சிலைகள் கரைப்பதற்காக, பி.டி.ஏ., நிர்வாகம், நகரில் உள்ள, 9 ஏரிகள் அருகில், சிலை கரைப்பு நீர் தேக்கங்களை அமைத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், நீர் நிலைகள் அசுத்தம் அடையாத வகையில், மக்கள், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என, பி.பி.எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, சிலை கரைப்பு நீர் தேக்கங்களில், மக்களுக்கு உதவி செய்யும் வகையில், பி.டி.ஏ., ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். வரும் ஆக., 29 முதல், செப்., 7ம் தேதி வரை, காலை, 10:00 மணியில் இருந்து, இரவு, 8:00 மணி வரை செயல்படும். பொதுமக்கள், செயற்கை வண்ணங்களை பூசப்பட்ட சிலைகளை வாங்கி, பயன்படுத்த வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிலைகளை கரைப்பதற்கு முன், மாலைகள், அலங்கார பொருட்கள் அனைத்தையும் அகற்றும்படியும், பி.பி.எம்.பி., கேட்டு கொண்டுள்ளது.