பதிவு செய்த நாள்
23
ஆக
2014
12:08
தேனி: தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயிலில் செப்., 7ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. பெரியகுளம் ரோட்டில் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள இக்கோயிலில் கன்னிமூலையில் அமைந்துள்ள கணபதி சுயம்புவாக தோன்றியவர். சுயம்பு கணபதியை பெத்தாட்ஷி அம்மாள் பூஜை செய்து வழிபட்டதால், அவரது பெயராலேயே பெத்தாட்ஷி விநாயகர் என அழைக்கப்படுகிறார். கன்னிமூல கணபதி அருகே நாகர் அமைந்துள்ளார். எனவே வைதீக முறைப்படி இவருக்குதான் முதல் பூஜை நடைபெறும். அடுத்து தான் மூலவருக்கு நடைபெறும். மூலவர் வலம்புரி விநாயகராகவும், தும்பிக்கையில் பிரம்ம கலசமும் வைத்துள்ளார். தலவிருட்சமாக வன்னிமரமும், வில்வமரமும் அமைந்துள்ளன. விநாயகருக்கு வலதுபுறம் துர்க்கை, சரஸ்வதி, இடதுபுறம் சிவன் பார்வதிக்கு நடுவில் முருகன் அமர்ந்திருக்கும் வகையில் சோமசுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். வடக்கு பிரகாரத்தில் அஞ்சனாதேவியுடன் ஆஞ்சநேயர், கால பைரவர், நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளது. விநாயகர் கோஷ்டத்தில் மகாலட்சுமி, முருகன், நர்த்தனவிநாயகர், சோமாஸ்கந்தர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா சன்னதிகள் உள்ளன. கோயில் சாஸ்திரப்படி மிகவும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கு வரும் செப்டம்பர் 7ம் தேதி காலை 7.35 மணியில் இருந்து 8.15 மணிக்குள் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு கோயில் அர்ச்சகர் ராமச்சந்திரனை 99948 77505, 98945 04141 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புடைய கோயில்கள் :