பதிவு செய்த நாள்
23
ஆக
2014
12:08
அவிநாசி: அவிநாசியில் உள்ள ஐயப்பன் கோவிலில், வரும் 31ல் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு, இறுதிக்கட்ட திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அவிநாசி, பைபாஸ் ரோடு அருகில் ஐயப்பன் கோவில் திருப்பணி, கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. பிரதான சன்னதியில் ஐயப்பன், பிரகாரத்தில் கன்னி மூல கணபதி, சுப்ரமணியருக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. மூலவர் விமானம், சபரிமலை கோவில் விமான வடிவில் கட்டப்பட்டுள்ளது. அதில், செம்பு தகடுகள் பொருத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதேபோல், கோபுரங்கள், கோவில் வளாகம் ஆகியவற்றில் வர்ணம் பூசும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. தளங்கள் சீரமைப்பு, சுற்றுச்சுவர் வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேக பூஜை 28ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கும். நான்கு கால யாக பூஜை, வரும் 29ல் துவங்கி, 31 காலை 7.00 மணி வரை நடக்கிறது. 28ம் தேதி மாலை, கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும், ஐயப்பன் விக்ரஹம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஐயப்ப பக்தர்கள், தீர்த்தக்குடங்களை சுமந்து செல்ல உள்ளனர்.
தொடர்புடைய கோயில்கள் :