தாய்லாந்தில் பாங்காக் நகரிலிருந்து சுமார் நுõறு கி,மீட்டர் தொலைவில் வாட் ஸ்ரீ சுதாராம் வோரலிகான் என்ற புத்தர் கோயில் உள்ளது. இதனை ஒட்டியே இந்த கணேசர் பூங்கா உள்ளது. கணேசரை, இந்து மதத்தினர் மட்டுமின்றி ஜெயினர்கள் மற்றும் புத்தமதத்தினரும் விரும்பி வணங்குகின்றனர். இதனால் லுயாங்போர் ஹென் என்ற தாய்லாந்துக்காரர், புத்தர் கோயில் அருகிலேயே ஒரு கணேசர் பார்க்கையே உருவாக்கியுள்ளார்!
முதலில் (2.56 ஏக்கர் இடத்தில்) முதியோர் இல்லம் அமைக்கத்தான் திட்டமிட்டிருந்தார். பிறகு மனதை மாற்றிக் கொண்டு பிரபல இந்து தெய்வமான கணேசரின் பல உருவங்களை அமைத்து. சுற்றி புத்தமத கருத்துக்களை எழுதி, புத்தமத பக்தர்களை படித்து மகிழ வைக்கத் தீர்மானித்தார்! அதன் படி எழுந்ததுதான் கணேசர் பூங்கா! நாலு கைகளுடன் உட்கார்ந்த அமைப்பில் ஒரு பிரம்மாண்ட பிள்ளையார். இவருக்கு எதிரில் இவரைப் பார்த்தபடி ஒரு மூஞ்சூறு, பிள்ளையாரின் நான்கு கைகளில் ஒன்றில் சூலமும் மற்றொன்றில் கொழுக்கட்டையையும் காணலாம்.
இந்த பார்க்குக்கு வரும் பக்தர்கள், பயபக்தியுடன், தங்கள் மனதில் எழும் அபிலாஷைகளை, மூஞ்சூறின் ஒரு காதை மூடி மற்றொரு காதில் சொல்லுகின்றனர். இப்படிச் சொன்னால் அவர்கள் நினைப்பது பலிக்குமாம். மற்றொரு பிள்ளையார் சாய்ந்த நிலையில் கம்பீரமாய் காட்சி தருகிறார். அமர்ந்த நிலையில் காட்சி தரும் பெரிய பிள்ளையாரை அமைக்க தாய்லாந்தின் 73000 கிராமங்களிலிருந்தும் மண் எடுத்து வந்து கலந்து உருவாக்கியுள்ளனர்! உயரம் 15 மீட்டர். அமர்ந்த நிலையில் இருகால்களையும் உள்நோக்கி வைத்துள்ள வகையில் ஒன்பது மீட்டர் அகலம்! இந்த இரு பெரிய கணேசர் சிலைகளை ஒட்டி, ஒரு கணேசர் மியூசியம் உள்ளது. இதில் 108 வகையான கணேசர்களைக் காணலாம். இதில் வர கணபதி மற்றும் துண்டி கணபதிகளும் அடக்கம். அன்பை வேண்டுபவர்கள் அதற்காக ஏங்குபவர்கள்.. வரகணபதியை சரணடைந்து தங்கள் எண்ணங்களை வேண்டுதலாக வைக்கின்றனர். கஷ்டங்களையே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள், துண்டி கணேசரை நாடுகின்றனர். பொதுவாக நடனக் கலைஞர்கள், ஓவியர்கள், எழுந்தாளர்கள், கணேசரை முதற்கடவுளாக ஏற்று வணங்கி தங்கள் பணியைத் துவங்குகின்றனர். பிறகு தொடர்ந்து வணங்குவதால்.... தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனவும் நம்புகின்றனர்... தாய்லாந்தில் கணேசர் நம்பிகையூட்டும் தெய்வமாக வணங்கப்படுகின்றார்.