பதிவு செய்த நாள்
27
ஆக
2014
11:08
திருப்பாச்சூர் : தேவார மூவரால் பாடல்பெற்ற, திருப்பாச்சூர் சிவாலயத்தில், ஒரே இடத்தில், 11 விநாயகர் சிலைகள் உள்ளன. திருவள்ளூர் அடுத்துள்ள பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது, திருப்பாச்சூர் கிராமம். இங்கு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார மூவரால் பாடல்பெற்ற திருத்தலமான, வாசீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.திருத்தணி சுப்ரமணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், 11 விநாயகர் சிலைகள், ஒரே இடத்தில் உள்ளன. அந்த சன்னிதி, செல்வ விநாயகர் சபை என, அழைக்கப்படுகிறது. அந்த சன்னிதியில், சங்கடஹர சதுர்த்தி அன்று, தலா 11 தேங்காய்கள், வாழைப்பழங்கள் சமர்ப்பித்து, நெய்தீபங்களும் ஏற்றி, அருகம்புல் மாலை அணிவித்து, 11 விநாயகர்களுக்கும், அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தால், சங்கடங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், தினமும் காலை 11:00 மணியளவில் நடைபெறும், உச்சிக்கால பூஜையின்போது, 11 விநாயகர்களுக்கும் பாலபிஷேகம் செய்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வரும், 29ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, பிற்பகல் 4:00 மணி முதல், செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு, செல்வ விநாயகர் வீதியுலா நடைபெறும்.