பதிவு செய்த நாள்
27
ஆக
2014
11:08
புதுச்சேரி : புதுச்சேரியில் மரம், செடிகளால் கோவில் கோபுரங்கள் சிதையாமல் பாதுகாக்க, முதல் முறையாக, மூலிகை மருந்துடன் கூடிய சிமென்ட் கலவை பூசும் பணி, வரதராஜப் பெருமாள் கோவிலில் துவங்கியுள்ளது. புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள், மணக்குள விநாயகர் மற்றும் வில்லியனுாரில் உள்ள கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த, புனரமைப்பு பணி நடந்து வருகிறது.இந்நிலையில், காந்தி வீதி வரதராஜப் பெருமாள் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில், ராஜ கோபுரங்களில் வளர்ந்துள்ள, செடி கொடிகளை, ’டப்போலா’ எனும், கலவையை பயன்படுத்தி நிரந்தரமாக அழிக்கும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இப்பணியில், சென்னையைச் சேர்ந்த பொறியாளர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மூலிகை கலவை பூசும் பணியை, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, பொறியாளர்கள் நல்லாம்மணி, செல்வராஜ், கேப்டன் பிரதாபன், ஸ்பதி அழகுமுத்து ஆகியோர் பார்வையிட்டனர்.முருகானந்தம் குழுவினர், தமிழக அறநிலையத்துறையின் கீழ், கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்கது.’டப்போலா’ என்பது 21 மூலிகைகளின் கலவை ஆகும்.கோவில் கோபுரத்தில் உள்ள செடிகளை அகற்றி, அந்த இடத்தில் இம்மருந்தினை, பூசும்போது, செடியின் வேர் முழுவதுமாக அழிந்து, மக்கி விடுகிறது. இதனால் மீண்டும் அப்பகுதியில் செடிகள் வளர்வது கிடையாது. பொறியாளர் முருகானந்தம் கூறுகையில், ’கடந்த 25 ஆண்டுகளாக தென் மாநிலங்களில் உள்ள 6000க்கும் அதிகமான, கோவில் கோபுரம், சுவர்களில் செடிகளை அகற்றி வருகிறேன். எங்கள் பணியை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. செடிகள் அழிக்கப்பட்டஇடத்தில் இந்த மருந்து பயன்படுத்திய பின்பு, அதே செடி மீண்டும் அங்கு வளர்வதில்லை’ என்றார்.