பதிவு செய்த நாள்
27
ஆக
2014
03:08
சென்னையில் வாழ்ந்த மாபெரும் தத்துவவாதிகளில் குறிப்பிடத்தக்கவர், ராமலிங்க அடிகளார்.சென்னையில் வாழ்ந்து, வடலூரில் மறைந்தார். அவரது சமகாலத்தில், சென்னையில் வாழ்ந்த மற்றவர்களைக் காட்டிலும், தமது பாடல்களில் பல இடங்களில், சென்னையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவரது, தருமமிகு சென்னை என்ற சொல்லாட்சி, மிகவும் புகழ்பெற்றது. சென்னையை விதந்தோதிய வள்ளலாரின் தியானத்திற்கு, அன்றைய சென்னையின் நெரிசலும், மக்கள் தொகையும், இடையூறாக இருந்தன.அதனால், தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால், சிலுகுறும் என்னுளம் பயந்தே... எனக் கூறி, சென்னையை விட்டு வெளியேறினார். திருவொற்றியூர் நந்தியோடை ஆசிரமத்துக்கு அவர், அடிக்கடி சென்று வந்தார்.பிற்காலங்களில், வள்ளலாரின் மகத்துவத்தை உலகம் அறிந்தது. ஆனால், அன்றைய சென்னை உணராத மகத்துவத்தை, இன்றைய சென்னையும் உணரவில்லை.
வாழ்ந்த வீடு: வடலூர் அருகே உள்ள மருதூரில் வள்ளலார் பிறந்ததாக, வரலாறு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவரது தாயாரின் ஊர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள சின்னக்காவணம்.வள்ளலார் பற்றி ஆய்வு செய்து வரும் முனைவர் ப.சரவணன் இதுகுறித்து கூறுகையில், தாய் வீட்டில் முதல் பிரசவம் பார்ப்பது தமிழகத்தில் வழக்கம். அந்த அடிப்படையில், சின்னக்காவணத்தில் தான், வள்ளலார் பிறந்தார், இன்று அங்கு ஒரு சன்மார்க்க சபை கட்டப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல்,1825 முதல், 1858 வரை, ஏழுகிணறு வீராசாமி தெருவில், 31ம் எண் வீட்டில் வள்ளலார் வசித்துள்ளார். தற்போது அந்த வீடு தனியார் வசம் உள்ளது. எனினும் வீட்டின் முகப்பில், வள்ளலார் அந்த வீட்டில் வசித்தது குறித்த, பலகை வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அவர் வசித்த காலகட்டத்தில் தான், அவரது ஐந்து திருமுறைகளில் இடம் பெற்றுள்ள பாடல்களை அவர் பாடியிருக்க வேண்டும்.வள்ளலார் வாழ்ந்த ஏழுகிணறு வீடு, அவரது நினைவில்லமாக மாற்றப்படும் என, 2003ல் அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த செம்மலை அறிவித்தார். இன்று வரை, அது தனியார் வசமே உள்ளது.அதை மீட்டெடுப்பதற்கு, அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பேசிய இடம் எங்கே?: வள்ளலாரின் மூத்த சகோதரர் சபாபதி, சைவசமய சொற்பொழிவாளர். குறிப்பிட்ட நாளில், அவரால் சொற்பொழிவாற்ற செல்ல முடியவில்லை. அவருக்கு பதிலாக, வள்ளலாரே, பெரியபுராணம் குறித்து சொற்பொழிவாற்றினார்.மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள, மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு அருகில், சோமசுந்தர செட்டியார் வீட்டில், அந்த சொற்பொழிவு நடந்தது.அந்த இடம், பிற்காலத்தில் கைமாறி, மறைமலை அடிகள் நூலகமாக மாறியது. தற்போது, அந்த பழைய கட்டடமும் இடிக்கப்பட்டு தற்போது, புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதுவும் தனியார்வசம் உள்ளது.பாடி திருவலிதாயம் சிவன் கோவில், திருமுல்லைவாயல் மன்னாதீஸ்வரர் கோவில், பாரிமுனை கந்தகோட்டம் போன்றவை, வள்ளலாரால், பாடல் பெற்ற தலங்கள்.அவை வழிபாட்டு தலங்களாக இருந்ததால்தான், பிழைத்திருக்கின்றன.
வழிகாட்டுகிறது கேரளா: இதுகுறித்து, முனைவர் ப.சரவணன் கூறியதாவது:பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், ஒரு வீட்டின் வயது, 100 ஆண்டுகளை தாண்டினால், அரசின் அனுமதி பெறாமல், சிறு மராமத்து பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாது. அந்த அளவுக்கு கடுமையான சட்டங்களை அந்நாட்டு அரசு இயற்றியுள்ளது.ஆனால், தமிழகத்தில் பிறந்த மிகச் சிறந்த மகானின் வீட்டைக் கூட, நம்மால் பாதுகாக்க முடியாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது.கேரளாவில் நாராயண குரு வாழ்ந்த வீட்டையும், அவர் தொடர்பான இடங்களையும், போற்றி பாதுகாத்து வைத்துள்ளனர். அதேபோல், விவேகானந்தர் விஷயத்திலும் நடந்துள்ளது. ஆனால், வள்ளலாரை மட்டும் நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது, அநீதி.இவ்வாறு முனைவர் ப.சரவணன் வேதனை தெரிவித்தார்.
- நமது சிறப்பு நிருபர்