பதிவு செய்த நாள்
28
ஆக
2014
12:08
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், பல்வேறு இடங்களில், வித்தியாசமான திருக்கோலங்களில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். பாடல்பெற்ற தலமான திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், பல்லவர் காலம் முதல் பல்வேறு திருப்பணிகளை கண்ட கோவில். அங்குள்ள, 16 கால் மண்டபத்தில், சிங்கத்தின் மேல், 10 கைகளை உடைய நான்முக, இடம்புரி விநாயகர் சிற்பம் அழகுற செதுக்கப்பட்டுள்ளது.
கோவிந்தவாடி கிராமத்தில்...:காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில், கோவிந்தவாடி கிராமத்தில், கயிலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் மகா மண்டபத்தில் உள்ள ஒரு தூணில், மேற்கு நோக்கி, சிம்ம வாகனத்தில், 10 கரங்களுடன் பஞ்சமுக விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. இதில் விநாயகரின் தலைக்கு மேல் ஒரு தலை காட்டப்பட்டுள்ளது. முக்கண் விநாயகர்திருத்தணி - அரக்கோணம் சாலை, நீதிமன்ற வளாகம் அருகில் அமைந்துள்ளது, முக்கண் விநாயகர் கோவில். இக்கோவிலில் உள்ள மூலவர் விநாயகருக்கு, நெற்றியில் மூன்றாவது கண் உள்ளது. இந்த பகுதியில், மூன்று கண் உடைய இந்த விநாயகர், சிறப்பான மூர்த்தியாக கருதப்படுகிறார்.
சுயம்பு விநாயகர் : திருவள்ளூர் மாவட்டம், விடியங்காடு அடுத்த பொன்னை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, விநாயகபுரம் கிராமம். இங்கு, 60 ஆண்டுகளுக்கு முன், சுயம்புவாக இரண்டு விநாயகர் சிலைகள் தோன்றின. இந்த விநாயகர் சிலைக்கு, சிறுவர்கள் தலைச்சுமையாக செங்கற்களை கொண்டு வந்து மதில் சுவர் அமைத்தனர்.கோவில் விரிவாக்கப்பட்டு, 1996ல், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஒட்ட னேரி என்ற இந்த கிராமத்தின் பெயர், நாளடைவில் விநாயகபுரம் என,வழங்கலாயிற்று. மூலஸ்தானத்தில், இரண்டு சுயம்பு விநாயகர் சிலைகள் உள்ளன. பெரிய சுயம்பு, நேர்முகமாக பார்த்தால் லிங்க வடிவத்திலும், நடுவில் விநாயகர் உருவத்திலும், மேல்பகுதியில், நாக சொரூப மும் கொண்டிருக்கும். அருகில், சிறிய சுயம்பு, அரூபமாக காட்சியளிக்கிறது.
அச்சிறுபாக்கத்தில்...: அச்சிறுபாக்கம் பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது. மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்ட விநாயகர் திருவுருவம் தனிக் கோவிலில் வைத்து வழிபடப் பெறுகிறது.
தீயம்பாக்கத்தில்...: சென்னை மாதவரம் அடுத்த தீயம்பாக்கம் அருகேயுள்ள விளாங்காட்டு பாக்கத்தில், சிவலிங்க வடிவில், பஞ்ச முக விநாயகர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலில் 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.