பதிவு செய்த நாள்
30
ஆக
2014
03:08
திருப்புத்தூர்: குடவறை கோயில்கள், நூற்றாண்டு பல கடந்தும், காலத்தால் அழியாதவை. பண்டைய கட்டட தொழில் நுட்பத்தை,கலைத் திறமையை, வரலாற்றை பதிவு செய்த முறையை நமக்கு பறை சாற்றுகின்றன. திருப்புத்தூர் பகுதியில்,பல குடவறைக் கோயில்கள் உள்ளன. அதில் குன்றக்குடியும் ஒன்று.முருகன் கோயில் அமைந்துள்ள, குன்றக்குடி மலையின் தென்மேற்கு அடிவாரத்தில் தான், தொல்லியல்துறை கட்டுப்பாட்டில்,1500 ஆண்டு தொன்மையான, நான்கு குடவறைக் கோயில்கள் உள்ளன. கீழக் கோயில் என்றழைக்கப்படும் இக்கோயில்கள் யானை நிற்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ளது. கி.பி.17 ம் நூற்றாண்டில்,வெங்களப்ப நாயக்கரால் கட்டப்பட்ட, அழகிய முன் மண்டபம் நம்மை வரவேற்கும். முதல் குடவறையில், சுந்தரேசுவரர்,பிரமாண்டமான சிவலிங்கமாகவும், இரண்டாவது குடவறையில், அண்ணாமலையார் சிவலிங்கமாகவும், முன்மண்டபத்தில், கருடாழ்வாருடன் பெருமாள் புடைப்புச் சிற்பமும்,பிரமாண்டமாக காட்சி தருகின்றன.
மூன்றாவது குடவறை,வண்ணச் சிற்பங்கள் மனதை அள்ளுகின்றன. மலைக் கொழுந்து நாதர், சிவலிங்கமாக மூலவராகவும், துவாரபாலகர்கள், வள்ளி, தெய்வானையுடன், முருகன், யோகநிலையில் விநாயகர் புடைப்பு சிற்பங்களும், மூலிகை வண்ணத்தால், சுதை வேலைப்பாடுகளுடன் உருவான குடவறை, பிரமாண்டமான, புடைப்புச் சிற்பங்களாக, கருடாழ்வாருடன் திருமால்,பிரம்மா,சிவன்,விஷ்ணு, அடியும், முடியும் ஆக காட்சி அளிக்கிறது. நான்காவது குடவறையில்,கோடாரி ஆயுதத்துடன், சண்டிகேஷ்வரர் அமர்ந்த நிலையில் உள்ளார். சிவலிங்கத்தை சுமக்கும் விநாயகர் மூன்றாம் குடவறையில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தோற்றத்தில், அமர்ந்த,யோகநிலையில், வலம்புரி விநாயகர் புடைப்பு சிற்பமாக உள்ளார். இந்த விநாயகர் தலையில், மூன்று சிவலிங்கங்களை சுமந்து காணப்படுகிறார். உலகில் வேறு எங்குமே, விநாயகர் இந்தத் தோற்றத்தில் காணப்படுவதில்லை என்பது சிறப்பாகும். தொன்மையான கல்வெட்டு: சிற்பங்கள் மட்டுமல்ல. கல்வெட்டுக்கள் மிகவும் பழமையானவை. இங்கு கி.மு.,மூன்றாம் நுõற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்துக்களாலான,குகைக் கல்வெட்டுக்கள் உள்ளன. மலையின் மேற்கே, பிராமிக் கல்வெட்டுக்களும், 9 சமணர் படுகைகளும் உள்ளன. குன்றக்குடி பஸ் ஸ்டாப் அருகில், சிறு பாதை மூலம் மலைக்கு சென்று, பிராமிக்கல்வெட்டுக்களையும்,சமணர் படுகைகளை பார்க்கலாம். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, இக்கோயில்களை பார்வையாளர்கள் தரிசிக்கலாம். தகவல்களுக்கு : 04333- 274 205ல் தொடர்பு கொள்ளலாம்.