பதிவு செய்த நாள்
02
செப்
2014
11:09
நாகப்பட்டினம்: நாகை அருகே, பால்மொழி அம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியை, ரயில்வே நிர்வாகத்தினர் அடைத்ததால், ஆவேசமடைந்த சாதுக்கள், நேற்று முன்தினம், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்; நேற்றும், ரயிலை மறிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை அடுத்த, வடக்கு பொய்கைநல்லூரில் அமைந்துள்ளது, 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால்மொழி அம்மன் கோவில். சித்தர்கள், இக்கோவிலை உருவாக்கி, இப்பகுதியில் தங்கி, தவம் புரிந்ததாக ஐதீகம். சில தினங்களுக்கு முன், ரயில்வே நிர்வாகம், இரும்பு கம்பிகளால் தடுப்புத் தூண்களை அமைத்தது, இக்கோவிலுக்குச் செல்லும் வழியை மறைத்தது. இதனால், கோவிலில் தங்கியிருக்கும் 100க்கும் மேற்பட்ட சாதுக்கள், ஆவேசமடைந்து, நேற்று முன்தினம், ரயில் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் பேச்சுவார்த்தைக்குப் பின், மறியலை விலக்கிக் கொண்டனர். கோவிலில், சாதுக்களிடம் பேச்சு நடத்த அதிகாரிகள் வந்தனர். போலீசார் குவிக்கப்பட்டதால், ஆவேசமடைந்த சாதுக்கள், மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில், ஈடுபட முயன்றனர். அவர்களுக்கு ஆதரவாக, கிராம மக்களும் திரண்டதால், பதற்றமான சூழல் ஏற்பட்டது.