பதிவு செய்த நாள்
02
செப்
2014
12:09
திருப்பூர் : திருப்பூர், சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவை கரையாமல் மிதக்கின்றன. கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளாமல், மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூர் நகரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து இயக்கங்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 1,200 விநாயகர் சிலைகள், கடந்த மூன்று நாட்களாக, சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. மண், மாவு போன்ற தீங்கு விளைவிக்காத பொருட்களில் சிலைகள் தயாரிக்க வேண்டும்; ‘பிளாஸ்டர் ஆப் பாரீஸ்’ போன்ற நீரில் கரையாத மற்றும் மாசு ஏற்படுத்தும் வேதிப்பொருட்களில் தயாரிக்கக் கூடாது; ரசாயன வண்ணம் பூசக்கூடாது என மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் கண்காணிப்பு பணி கொள்ளப்படவில்லை; கரைக்கும் பகுதியில் ஆய்வும் செய்யப்படவில்லை. இதனால், குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டவற்றில், பெரும்பாலான சிலைகள் கரையாமல், நீரில் மிதக்கின்றன. மாலைகள், மஞ்சி, ரீப்பர் கட்டைகள் குளத்துக்குள் போடப்பட்டதால், அவையும் கரை ஒதுங்கி வருகின்றன.
நீரில் கரையாத வேதிப்பொருட்கள் காற்றுக்கு அலையாக வந்து, கரையை சுற்றிலும் வெண்மை நிற நுரை படிந்துள்ளது. சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், திடக்கழிவு பொருட்கள் குளத்தில் இருந்து அகற்றப்படுகின்றன. கரையாத சிலைகளை என்ன செய்வதென தெரியாமல், மீண்டும் தண்ணீருக்குள் போட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் பி.ஏ.பி., வாய்க் கால்களில், ஓடும் தண்ணீரில் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தன. இந்தாண்டு, பி.ஏ.பி.,யில் தண்ணீர் திறக்காததால், கீழ்பவானி வாய்க்கால், திட்டுப்பாறை பகுதியில் கரைக்க முதலில் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக, கடைசி நேரத்தில், சாமளாபுரம் குளத்தில் கரைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், சிலைகள் கரையாமல் மிதப்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குளத்தின் நீர் பகுதி சேறும், சகதியுமாக மாறியுள்ளது;
வேதிப்பொருட்களால் உருவான சிலைகளால், குளத்தின் நீர் மாசுபட்டுள்ளது.சாமளாபுரம் குளம், சுற்றுப்புற பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக உள்ளது; 2,000 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதியும் பெறுகின்றன. இக்குளம் நிரம்பி, வேட்டுவபாளையம் குளத்துக்கும் தண்ணீர் செல்லும். இரண்டு குளங்களும், சுற்றுப்புற பகுதிகளும் பாதிக்கும் அபாயம் உள்ளதால், குளத்தின் நீரை ஆய்வு செய்து, மாசு ஏற்படுத்தும் பொருட் களை அகற்றவும், தண்ணீர் மாசு ஏற்படாமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (தெற்கு) சண்முகம் கூறுகையில், “சிலைகளை கரைப்பதற்கு முன், குளத்தின் நீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப் பட்டது. கரையாமல் உள்ள சிலைகள், வேதிப்பொருட்கள் கலப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். விசர்ஜனம் முழுமையாக முடிந்தபிறகு, நீர், மண் மாதிரி சேகரித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமாரசாமி கூறுகையில், “கரையாமல் உள்ள சிலைகள், கழிவுகளை முறையாக அகற்றவும், தண்ணீர் மாசுபடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.